Thursday, April 29, 2010

மௌனம் என்னும்..

இவ்வளவு அடர்த்தியானதா இந்த மௌனம் ?

வனாந்தரங்களிளிருந்து சுள்ளிகள் பொறுக்கி
சாவகாசமாய் என் வலிகளை
சுட்டு பொசுக்கி
சுவையூறும் காரம் சேர்த்து தின்னும்
உருவமில்லா உருவகமொன்று
உள்ளுக்குள் உருண்டு தணிகிறது.

என் கவிதைகள் மேலிருந்த நம்பிக்கையை
ஒட்டுமொத்தமாய் தகர்த்துவிட்டு
ஒன்றும் அறியாதது போல
நகர்ந்து போகிறது
மௌனத்தின் ஓரிழை.

பைத்தியகாரதனங்களின் உச்சத்தில்
ஞானம் பிறக்கிறது
எப்படி இப்படி?

இது மிகவும் அற்ப்புதமானதாயிருக்கிறது
பரிமாறிக்கொண்ட எவற்றையும் விட.

இது மிகவும் அழகாயிருக்கிறது
மனிதர்களின் விஷேஷ சுபாவங்களையும்
கேட்கப்பட்ட கதைகளையும் விட.

யாருக்கும் என்னை
பிடிக்காமல் போகிற கணங்களிலும்
என்னால் புன்னகைக்கமுடிகிற
சுகானுபவம் வாய்த்ததும் இதனால்தான்.

மௌனம்..
எப்படி பகிர்வேன் இதை?

பகிர்தலின் சாத்தியம் அறியாமலா
என் புளு ரேனால்ட்ஸ் இயங்கிக்கொண்டிருக்கிறது?

மேல்விழும் நீர்த்துளியின்
மௌனத்தின் சதவிகிதத்தை
உணரமுடிகிறது
உணர்த்தமுடியுமா தெரியவில்லை.

இது யாருடையது?
என்னுடையதா?
என் அருகாமையில் மகிழ்ச்சி கொள்ளாத அவளுடயதா?
என் பணப்பை குறித்து கேலி செய்த அவனுடையதா?
என் நம்பிக்கைகளின் ஆஸ்த்தியா?
என் தேவதைகளின் ஆசிர்வாதமா?
என் அழுக்குகளின் கூடையா?
இன்னும் எழுதப்படாத என் கவிதைகளின் கருப்பொருளா?
இன்னும் பார்க்கபடாத
இடங்களின்/ மனிதர்களின்
அகவெளியின் பிரதிபிம்பமா?

சுட்டெரிக்கிறது ஒரு நொடி
குளிரடிக்கிறது மறு நொடி.

இதுவேறு தனிமை
இதுவேறு வேதனை
இதுவேறு வெறுமை
இதுவேறு அழுகை
இதுவேறு முத்தம்
இதுவேறு உவகை
இதுவேறு சிலிர்ப்பு
இதுவேறு இது.

மாயங்களற்ற சொற்களில்
நீளும் என் வரிகள்
ஒருபுறம்
அழியத்துவங்குவது குறித்து எனக்கு
கவலை ஏதுமில்லை.

இவ்வளவு அடர்த்தியானதா இந்த மௌனம்?


2 comments:

Kalpana said...

nice template

ஸ்வரூப் said...

மௌனம் மௌனம்ன்டு இந்த பேச்சு பேசற...