Saturday, October 2, 2010

வீழ்தல் பருவம்



கொட்டும்
மழையில்
படுத்துக்கிடந்தேன்
ஒரு
நாயைப் போலவும்
பிறகு
கரையும்
ஒரு
காகிதப் படகெனவும்
பின்னர்
ஒரு
உறிஞ்சப்படும்
குவளையின்
மிதந்தலையும்
தேநீராகவும்.

Friday, June 4, 2010

மழையோடு போய்

தலைவலியை
காணாமல் போகச்செய்து
திவ்யமாய்ப் பெய்கிறது
மாலை நான்கிலொரு மழை.
பல்லடம் வரை
சென்றுவர நினைத்தது
எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று.
its raining here என்றொரு குறுந்தகவலை
அவளுக்கனுப்பிவிட்டு
மழை பார்த்தேன்.
சில துளிகள்
மேனியில் பட்டு சிலிர்த்தது.
கண்டக்டரின் விசில் சத்தம்
குளுமையாய் இருந்தது.
ரஹ்மானின் பாடலொன்று
செல்லமாய் அதிர்ந்துகொண்டிருந்தது.
மழையின் மகிழ்ச்சி
பேருந்து முழுக்க பரவி
பள்ளிவிட்டுத்திரும்பிய
குட்டிப்பையன்கள் விழிகளை
அகல விரித்துப் பேசினார்கள்.
அருகில் இருந்தவர்
வெகு இயல்பாய்
எங்கே போறீங்க
என்று கேட்டார்.
சில பெயர்கள்
மனசுக்குள் மந்திரம் போல
மிதந்தெழும்பின.
மணி கல்யாணம்
எவ்வளவு அழகாக நடந்திருக்கிறது!
மழையில் சுழலும்
மின்காற்றாடி பற்றி
அதிதிக்கு சொல்ல வேண்டும்.
வந்துவிட்டது என் நிறுத்தம்.
குளிர் சுவாசத்தோடு
இறங்கியவனை வரவேற்றார்கள்
பேருந்து நிறுத்தம் முழுக்க இருந்தவர்கள்
பூப்போட்ட பிளாஸ்டிக் குவளைகளில்
தேநீர் அருந்தியபடி.

Thursday, June 3, 2010

வெந்து தணிந்தது

வெந்து தணிந்தது
என் வீடு
மின்வெட்டு.

Wednesday, June 2, 2010

சொல்வனம்


பற்றியெரிகிறது
என் சொல்வனம் .
அர்த்த ஜ்வாலைகளின் பொன்னிறம்
ஒரு கவிதைக்கான மௌனத்தை
கொடுத்துப்போகிறது.
பெருங்காற்றலைகள்
சிறுபறவைகள் குறித்த
கவலையின்றிச் சுழல்கின்றன.
உன் ஞாபகமாய் வைத்திருக்கும்
ஒன்றிரண்டு சொற்களை மட்டும்
பைக்குள் போட்டுக்கொண்டு
தப்பிக்க முயல்கிறேன்
வலிகளின் ஆதி வழித்தடத்தில்.
நீ புரிந்துகொள்ளாத
இந்த உயிர்
இப்போது அழகாய்த்தெரிகிறது
எனக்கே.

Tuesday, June 1, 2010

போர்க்களம்


குருதி கசிய
என் தளவாடங்களை விட்டோடுகிறேன்
களத்தின் போர்தான்
போர்க்களமென யாருமெனக்கு
நினைவூட்ட விரும்பவில்லை.
நீ விரும்பித்தந்துவிட்ட
மௌனத்தின் ஒருபகுதி
தீப்பிடித்தேரிகிறதென
நான் கூச்சலிட முனையவுமில்லை.
வழி நெடுக என் குருதி
வலியோடு எரிய
மெல்ல நகர்கிறது
நன் விரும்பிச்சென்ற போர்க்களமும்
சிலபோர்நுட்பங்களும்.

Wednesday, May 19, 2010

மாமழை போற்றுதும்


உருகிக் கரைந்து போய்க்கொண்டிருக்கிறது
இம் மாமழையில்
நீ தந்த வருத்தங்கள் ..
உணர்வுகளில் குளிர் ஏறி மருகுகிறது
உன் அருகாமை வேண்டி..

உன் கதைகள்
உன் வியப்புகள்
நீ தந்த கூழாங்கல்
உன் பிரிய ஜன்னலோரம்
குறுந்தகவல் ஸ்மைலிக்கள்
எல்லாம்
சடசடக்கும் மழை சொட்டுகளாகி
விழுந்து புரள்கின்றன
மேனியிலும் மனத்திலும் ...

மழை சாட்சியாய் கேட்கிறேன்
தேநீர் தயாரிக்க நான் தயார்
என் பிழைகளை மன்னிக்க நீ தயாரா?

Saturday, May 15, 2010

குளிரூட்டி


கூட்ட நெரிசல் மிகுந்த
பேருந்துகளால்
அரசாங்கத்தை
திட்டிதீர்த்து கொண்டிருந்தேன்.
இளம் காற்று வீசும்
ஒரு தமிழ் பாடலை கேட்டபடி
ஏ சி பேருந்தில்
நானுமொருமுறை
பயனிக்கும்வரை.

Tuesday, May 11, 2010

அதிதேவதை

அகல விழிக்கும்
சாமிக்கு பயப்படாமல்
கோவில் சுவர்களின்
எதிரொலி உந்த
தம்பி பெயரை
உரக்கக் கத்திப் பார்க்கிற சிறுமி
எனக்கு அதிதேவதை.

பொழியும் மழையில்
சைக்கிள் பயணம்
வேகம் குறைவாய்...

Sunday, May 9, 2010

பூனைகள் அலையும் இரவு


நடுநிசியில் உன்னை
எழுதத் துடிக்கின்றன விரல்கள்
வெள்ளைப் பூனையின் அலைவுகளென
அறையில் ஒளிரும்
ஒரு குட்டி மஞ்சள் ஒளியோடு
முரண்டுபிடித்து விளையாடும்
என் நினைவுகளின்
அச்சிறு கணங்களிலும்
வானத்தின் நீலம்
உன் கன்னத்தில் இருப்பதாய்
ஊகிக்க முடிகிறது.
வரிசையாய் அடுக்கிவைத்திருக்கும் என்
டெனிம் பெர்ப்யூம் டப்பாக்களின் மீது
உன் பெயரை
உரக்கக் கத்தியபடி
ட்ரம்ஸ் இசைக்கலாம்
போலிருக்கிறது.

Friday, May 7, 2010

நவீன தலைவனின்
மடலேறுதல்
டயலர் டியூன் பாடல்.

Friday, April 30, 2010

நீரற்ற குளம்
தவளையின் கண்களில்
நகரும் மேகங்கள்
பழுப்பு வெயிலூடே
மழை பொழிவதை
பார்த்துச்செல்கிறேன்
என் ஏகாந்த ஜன்னலோரம்
அடித்த ஹாரனில்
விலகிப் போயிற்று
ஒரு கவிதை.
மழை போலவே தான்
இருக்கிறது
மழை பற்றிய தகவலும்.
இசைப்பிரவாகத்திற்கு
முந்தைய
இசைக்கலைஞனின்
வாத்தியப் பயிற்சிக் குறிப்புகளாய்
துவங்கிற்று
பெருமழைக்கு முந்தைய
சிறுதூறல்.
பிரவாகமெடுக்கும்
கீபோர்டின் இசையைப்போல
ஒரு கவிதை
எழுதவேண்டும் போலிருக்கிறது
ஒவ்வொருமுறையும்
ஒவ்வொரு கலரில்
டீ போட்டுத்தரும்
எங்கள் தெரு
டீக்கடை மாஸ்டருக்கு
வால்ட் டிஸ்னி என்று
பெயர் வைத்திருக்கிறேன்.
ப்ரவீணாக்குட்டியிடம்
கதையொன்று
சொல்லச்சொல்லிக் கேட்டேன்.
எதிர்கேள்விகள் கேட்கக்கூடாதென்ற
நிபந்தனையோடு
குள்ள மனிதர்கள் பற்றி
அவள் சொன்ன
கதையில் வந்த
ராட்சசனை விடவும்
பெரியது
அவளிடம் கதைகேட்ட
என் மகிழ்ச்சி.
கதையின் நீதி
யாதெனில்
குழந்தைகளிடம் கதை கேட்டால்
பெரியவர்களும் குழந்தைகளாகலாம் என்பதுவே

மழைநாள் தனிமை

==

பாதி திறந்த கதவின் வழியே
உள் நுழைகிறது
பெருந்துயரின் தனிமை.

மழை நாள்
மீதம் விட்டுச் சென்றிருக்கிற
வாசல் வானம்
உள் நுழையப்பார்ப்பது தெரியாமல்
வலம் வருகின்றன
சருகு இலைப் படகுகள்.

பொருள் புரியாமல் இருக்கிறது
பெயர் தெரியாத இலையின்
நிழல் பிரதிபலிப்பு.

ஆழ்ந்த மௌனத்தில்
பிறழ்ந்து கிடக்கின்றன
ஒரு ஜோடி செருப்புகள்.

குழந்தைகள் தடதடக்காத
மாடிப்படிக்கட்டுகளின்
ஒளிர் ஈரம்
ஒரு பனிமழையைச் சுமந்திருக்கிறது.

காம்பௌண்ட் சுவற்றில்
சார்த்தி வைதிருக்கிற
உடைந்த கதவின் அழுகை
எனக்குப் புரியாமல் போனால்தான்
அதிசயம்.

சுவடுகள் இல்லாமல்
நினைவுகளில் மட்டுமே
விழுந்து நொறுங்குகின்றன
பனிக்கட்டிகள்.

நந்தியாவட்டையும்
சிவப்புமிளகாயும் போல
இருளும் ஒளியும்
சந்திதுக்கொள்கிற தனிமைப்புள்ளியில்
நிகழ்கிறது
சூன்யாபரூப தியானம்.

ஒரு சிறுமழைக்குப் பிந்தைய குளிரை
என் சிகரெட் லைட்டர் வெப்பதால்
என்ன செய்து விடமுடியும்
அதிகபட்சம்.....?

இதற்கிடையில்
உள்ளின் மூலையில்
எவனோ ஒருவன்
ட்ரம்ஸ் இசைக்க முயன்று
தோற்க்கிறான்.

மழைவிட்ட பிறகும்
துணிக்கொடியில் தவமிருக்கிற
மழைத்துளிகளின்
ஆனந்தநடனம்
எப்போது வேண்டுமானாலும்
துவங்கலாம்......

பின்புறக்கதவின்
மிக்கிமௌஸ் தவிர
வேறு யார் வரப்போகிறார்கள்
இந்த உலகதிற்குள்...
...................
...................

Thursday, April 29, 2010

மௌனம் என்னும்..

இவ்வளவு அடர்த்தியானதா இந்த மௌனம் ?

வனாந்தரங்களிளிருந்து சுள்ளிகள் பொறுக்கி
சாவகாசமாய் என் வலிகளை
சுட்டு பொசுக்கி
சுவையூறும் காரம் சேர்த்து தின்னும்
உருவமில்லா உருவகமொன்று
உள்ளுக்குள் உருண்டு தணிகிறது.

என் கவிதைகள் மேலிருந்த நம்பிக்கையை
ஒட்டுமொத்தமாய் தகர்த்துவிட்டு
ஒன்றும் அறியாதது போல
நகர்ந்து போகிறது
மௌனத்தின் ஓரிழை.

பைத்தியகாரதனங்களின் உச்சத்தில்
ஞானம் பிறக்கிறது
எப்படி இப்படி?

இது மிகவும் அற்ப்புதமானதாயிருக்கிறது
பரிமாறிக்கொண்ட எவற்றையும் விட.

இது மிகவும் அழகாயிருக்கிறது
மனிதர்களின் விஷேஷ சுபாவங்களையும்
கேட்கப்பட்ட கதைகளையும் விட.

யாருக்கும் என்னை
பிடிக்காமல் போகிற கணங்களிலும்
என்னால் புன்னகைக்கமுடிகிற
சுகானுபவம் வாய்த்ததும் இதனால்தான்.

மௌனம்..
எப்படி பகிர்வேன் இதை?

பகிர்தலின் சாத்தியம் அறியாமலா
என் புளு ரேனால்ட்ஸ் இயங்கிக்கொண்டிருக்கிறது?

மேல்விழும் நீர்த்துளியின்
மௌனத்தின் சதவிகிதத்தை
உணரமுடிகிறது
உணர்த்தமுடியுமா தெரியவில்லை.

இது யாருடையது?
என்னுடையதா?
என் அருகாமையில் மகிழ்ச்சி கொள்ளாத அவளுடயதா?
என் பணப்பை குறித்து கேலி செய்த அவனுடையதா?
என் நம்பிக்கைகளின் ஆஸ்த்தியா?
என் தேவதைகளின் ஆசிர்வாதமா?
என் அழுக்குகளின் கூடையா?
இன்னும் எழுதப்படாத என் கவிதைகளின் கருப்பொருளா?
இன்னும் பார்க்கபடாத
இடங்களின்/ மனிதர்களின்
அகவெளியின் பிரதிபிம்பமா?

சுட்டெரிக்கிறது ஒரு நொடி
குளிரடிக்கிறது மறு நொடி.

இதுவேறு தனிமை
இதுவேறு வேதனை
இதுவேறு வெறுமை
இதுவேறு அழுகை
இதுவேறு முத்தம்
இதுவேறு உவகை
இதுவேறு சிலிர்ப்பு
இதுவேறு இது.

மாயங்களற்ற சொற்களில்
நீளும் என் வரிகள்
ஒருபுறம்
அழியத்துவங்குவது குறித்து எனக்கு
கவலை ஏதுமில்லை.

இவ்வளவு அடர்த்தியானதா இந்த மௌனம்?


Sunday, April 25, 2010

நீரில் தெரியும் வானம்
கடந்துபோகும் மேகங்கள்
மான்கள் நீர்பருகும் குளம்
இலையுதிர்கால பறவைகள்
கூடடையும்
சற்று தாமதமாய்.

Wednesday, April 21, 2010

அசையாமல் மரங்கள்
எறும்புகள் கூடடையும்
இலையுதிர்காலம்.
மெல்ல பறக்கும்
இலையுதிர்கால பறவைகள்
சிறகுகளை சுமந்தலையும் எறும்புகள்
இலைகளற்ற மரத்தின்
நிழலில் துள்ளும்
குட்டி அணில்கள் .

Sunday, March 14, 2010

1+0=10

பூஜ்யத்தை போலிருக்கும்
சக்கரத்தருகே
நீ எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு
என் மதிப்பெண்கள் 10.

பித்தனைப்போல நான்


வெய்யிலின்
பிள்ளைகளென
மஞ்சள் ஆட்டோக்கள்
தகதகத்து நிற்கின்றன
சிக்னல்களில்.
பயணிகள் நடைபாதையை
ஒற்றையடிப்பாதைஎன
ஆர்வம் கொண்டு
உற்சாகமாய் முனுமுணுத்துப்போகிற
பித்தனைப்போல
நான் உன்
குளிர் புன்னகையை
மனசுக்குள் நினைத்தபடி
என் பிரிய ipod-ஐ
இயக்கத்துவங்குகிறேன்.
சூரியக்கதிர்களின் வாஞ்சையில்
மேம்பாலங்களில் அமர்ந்திருக்கும்
காகங்களின் ஜீவன் பார்த்தபடி
என் மதியம்
மெல்ல நகர்கிறது.

Monday, March 8, 2010

உள்ளபடியே நான் .........


அர்த்தங்களை
ஒவ்வொன்றாய்
படித்துப் பார்க்க ஆசைதான் .
நான் என்ன செய்வேன்
உன் மௌனத்தின்
விரல் நுனியைப் பிடிக்கும் பொழுதே
வெடித்து சிதறுகிறேன்
உள்ளபடியே நான் ...

கவின்பாட்டி


பாட்டியின்
சுருக்குப்பைக்குள்
நிறைய ஹைகூக்கள்.

April Fool


ஏப்ரல் ஒன்றில்
தற்கொலை செய்து கொள்வதில்
ஒரு வசதியிருக்கிறது.
நண்பர்கள் உறவினர்கள்
தெரிந்தவர்களென எல்லோருக்கும்
நிதானமாய்
ஒரு போன் போட்டு
சொல்லிவிட்டுப் போகலாம்.

பெய்தாலும் பெய்யும் மழைபோல


எதிர்படும்
சிறுவர்கள்
பதறியோட
குடைமரம் கடந்து
நீள்கிறது
நம் ஒற்றையடிப்பாதை.
பட்டாம்பூச்சிக்கும்
தேன்சிட்டுக்கும் கூட
மணியடித்து
விலக்கச்சொல்கிறாய்.
தூரத்து தென்னைகளும்
குடிசையில் காத்திருக்கும்
உன் பாட்டியும்
நமக்காக சொல்லவிருக்கிற
கதைகளில்
நான் வேகம் கூட்டுகிறேன்.
பெய்தாலும் பெய்யும்
மழைபோல
நீ தரவிருக்கிற முத்தம்
வழியெங்கும்
குளிர்கிறது.